மான்ஸ்டர் 41
அத்தியாயம் : 41
ஆரபியோ அவளைப்பார்த்து முறைத்து, " அவனால என் மூளைக்குள் இல்லடி என்னோட உடம்புக்குள்ள போய் கூட பேச முடியும் அந்த அளவுக்கு அவன் எல்லா வேலையும் செய்வான் "...என்று கூற,
ரிஷி தன் முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டு , "நான் உன்கிட்ட அப்பவே சொன்னேன் படிச்சு படிச்சு சொன்ன நீ கேக்கல "...என்று ஆத்திரத்தோடு மொழிய
அதைக் கேட்ட ஆரபியோ, " அதையே சொல்லாத ரிஷி நான் தப்பு பண்ணிட்டேன் யார் சொன்னதையும் கேட்கலை தப்பு பண்ணிட்டேன் " என்று தலையிலேயே அடித்துக் கொண்டவள்," நீ சொன்ன ரிஷி நான் தான் கேட்கல இப்போ அதுக்கான வலிகளை அனுபவிச்சுட்டு இருக்கேன் என் குழந்தைங்க ரிஷி இரண்டு குழந்தைகள் முகத்தை கூட பார்க்கல ரிஷி" என்று அவள் கதற, அதை பார்த்து நண்பர்கள் செய்வதறியாது நின்றனர் ..
"எனக்கு ஒன்னும் வேணாம் ரிஷி அவங்கல பார்க்கணும் ரிஷி என்னோட ஒவ்வொரு அணுவும் என் குழந்தைகளை பார்க்கணும் பார்க்கணும் துடிக்குது ரிஷி எனக்கு என்ன பண்ணனும் தெரியல ரிஷி பேசாம அவனை தேடி போயிடலாம்னு தோணுது ரிஷி "...என்று கூற
அவனும் அவளை பார்த்து, " சட்டப்படி குழந்தைகள் உனக்குத்தான் சொந்தம் அது ராஜாவா இருந்தாலும் யாரா இருந்தாலும் எவனுக்கும் நீ பெத்த குழந்தைகள் மேல உரிமை கொண்டாட முடியாது "...என்று கூற
அவளோ அவனை பார்த்து , "அவனை எதிர்க்க முடியும்ன்னு உனக்கு தோணுதா ரிஷி??? நம்மனால சத்தியமா முடியாது ரிஷி அவனை எப்படியும் எதிர்க்க முடியாது அது தெரிஞ்சு தான் அவன் இப்படி நம்மல நோகடிச்சுட்டான் அதுவுன் காதல்ங்கிற பேர்ல களவாடிட்டான் ரிஷி "...என்று கூற,
ரிஷிக்கு கடம்பனை கொலை செய்ய வேண்டும் என்ற ஆத்திரம் கூட எழுந்தது, " அவன் மட்டும் என் கைல கிடைக்கட்டும் அப்புறம் இருக்கு அவனுக்கு "... என்று வாய்விட்டே கூறிவிட்டான்..
"அது உன்னால முடியாது ரிஷி அவன பத்தி உனக்கு தெரியாது "...என்று கூறி விட்டு நகர்ந்து கொண்டாள் ஆரபி... என்ன தான் அவனை எதிர்த்து ஆரபி பேசினாலும் அவனுடைய பலத்தை கூட இருந்து கண்டவள் ஆகிற்றே...
வாழ்க்கை அதன் போக்கில் போக எப்படி ஒரு மாதம் எப்படி கடந்தது என்றே அவளுக்கு தெரியவில்லை.. ஆம் இன்றோடு அவள் இங்கு வந்து ஒரு மாதம் முடிந்து விட்டது...
மீண்டும் மீண்டும் அவளது நண்பர்கள் அவளை தேடி வந்து அவளுக்கு ஆறுதல் கூறி , "இப்படி வீட்டுக்குள்ளேயே இருக்காத வெளியில வா நீ பார்த்த வேலையை பாரு "...என்று கூற அவளோ அவர்கள் கூறும் அனைத்திற்கும் மறுத்து விட்டு வீடே கதி என்று கிடந்து விட்டாள்..
அவன் தான் இந்த ஆயாவையும் வேலைக்கு அமர்த்தி இருப்பான் என அவளுக்கு புரிந்தது... ஆனால் ஆயாவின் குணம் அவளுக்கு பிடித்து போனதால் மட்டுமே அவரை மட்டும் ஏற்றுக் கொண்டிருக்கிறாள் மேலும் ஆயாவிடம் , "ஆயா நானே உனக்கு சம்பளம் தருகிறேன் நீ அவர் உனக்கு தந்த பணத்தை எடுக்க வேண்டாம் "... என்று கூற ,
ஆயாவோ யோசித்தார் ஏனெனில் அவர் அதில் இருந்து குறிப்பிட்ட தொகையை உபயோகப்படுத்தி இருந்தார்..அவளோ அவரது முகத்தை பார்த்து, " அந்த பணத்தை நீ யூஸ் பண்ணிக்கோ நானும் உனக்கு மாச மாசம் சம்பளம் வந்தர்றேன்"... என்று கூறியவளுக்கு யாராவது ஒருவர் அவளுடன் வீட்டில் இருப்பது அவளுக்கு கொஞ்சம் ஆறுதலாக தான் இருந்தது அதற்காகத்தான் அவ்வாறு கூறினாள் மேலும் உன் பணம் எனக்கு வேண்டாம் என்பது போலவும் அவள் நடந்து அவன் மீது வெறுப்பை வளர்த்தி கொண்டிருந்தாள்..
இப்படியே நாட்கள் செல்ல களங்கண்டான் அவளை காண வந்தார்....
வீடு தேடியே வந்து விட்டார் அவள் வீட்டுக்கு நுழைந்து, " ஆரபி "....என்று அழைக்க ,
அவளோ இந்த இடத்தில் அவரை எதிர்பார்க்கவில்லை என அவள் முகமே கூறினாலும் ஏனோ அவர்களுக்கு இடையே இருக்கும் ரத்த பந்தமோ என்னவோ அவரைக் கண்டதும் அவளுக்கு அழுகை முட்டியது ...
" எதுக்கு டா அழற அப்பா அன்னைக்கே உன்கிட்ட சொன்னேன் இல்லையா??? என்கூட வந்திடுன்னு நீ தான் கேட்கல... அழாத மா அது தான் அப்பா சொன்ன மாதிரி தான் இப்போ நடந்து இருக்கு... அவன் குடும்பம் அப்படித்தான் மா பிறரை ஏமாத்தி வாழுற குடும்பம் பார்த்தியா??? உன்னை எந்த நிலைமையில் கொண்டு வந்து விட்டு இருக்காங்கன்னு ??? நீ கவலைப்படாத மா அவனை என்ன செய்யணும்னு அப்பாக்கு நல்லா தெரியும் ...அவனை நான் பார்த்துக்கறேன்... இதுக்கு மேல அவனுக்கு செய்ய வேண்டியதை செய்ய தான் நான் வந்திருக்கேன்"... என்று களங்கண்டான் கூற ,
அவளுக்கோ அவர் கூறியதை கேட்டதும் அன்று களங்கண்டான் படித்து படித்து அவளிடம் மன்றாடியது நினைவு வந்தது..
அவளோ அவர் ஆறுதலாக பேசும் போதே அழுது கரைய, " இப்படி அழாதம்மா உங்க அம்மாக்கு நீ இப்படி அழுகிறது பிடிக்காது அவ ரொம்ப தைரியசாலி அவ இப்படி அழுது நீ பார்த்து இருக்கியா??? அவளோட பொண்ணு நீயும் இப்படி அழக்கூடாது தைரியமா இருக்கணும் களங்கண்டான் பொண்ணு தைரியம் இல்லாமல் இருக்கக்கூடாது... உனக்கு தேவை இப்ப என்னனு அப்பாக்கு தெரியும் உன் குழந்தைங்கதானே உன் குழந்தைகளை அப்பா அவன் கிட்ட இருந்து எப்படி வாங்கணுமோ வாங்கி உன்கிட்ட சேர்க்கிறேன் பிறகு நீயும் உன் குழந்தைகளும் சந்தோஷமா இருக்கலாம் "... என்று கூற
அதைக்கேட்ட அவளோ ஒரு நொடி கண்கள் மின்னி , "நிஜமாவா சொல்றீங்க?? என் குழந்தைங்களை பார்க்க முடியுமா??"... என்று கேட்டாள்..
" ஆமா மா நிஜமாத்தான் சொல்றேன் உன் புருஷனையும் அந்த அரண்மனையையும் எதிர்க்க தைரியம் இந்த உலகத்தில ஒரே ஒருத்தனுக்கு தான் இருக்கு அதுவும் இந்த களங்கண்டானுக்கு மட்டும் தான் அது உன் புருஷனுக்கும் நல்லாவே தெரியும்... அதனால நீ கவலைப்படாத மா ..என் பொண்ணு நீ இதோ இந்த சின்ன வீட்டில் தங்கி இருக்கிறது எனக்கு எவ்வளவு பெரிய அசிங்கம் தெரியுமா நீ கிளம்பு இப்பவே நாம போகலாம் "...என்று அதிகாரமாக கூற
அவளோ ஒரு நொடி செல்லலாமா என யோசித்தாள் ஏனோ அவளுக்கு அவளது தாய் நினைவுக்கு வந்தார்... தன் தாய்க்கு தன் தந்தையை பிடிக்காது தந்தையின் பெயரை கூறினாலே அவர் அவளிடம் சாடுவார்... ஆனால் இருவருக்குள்ளும் என்ன விஷயம் நடந்தது என இதுவரை அவளிடம் கூறியதில்லை ...
அப்படி இருக்க தான் களங்கண்டானுடன் சென்றால் தன் தாய்க்கு விருப்பமாக இருக்குமா??? என யோசிக்க,
அவரோ மகளின் முக பாவத்தை வைத்து, "என்னமா யோசிக்கிற??? இத்தனை நாள் உன்னை பார்க்க வராம இருந்த அப்பா திடீர்னு இப்ப வந்து நிக்கிறன்னு பார்க்கிறாயா??? இல்லை இத்தனை நாள் கண்டுக்காமல் இருந்த அப்பா கூட எப்படி போறதுன்னு யோசிக்கிறியா?? உன் அம்மா என்னை பத்தி உன்கிட்ட என்ன சொல்லி இருக்கான்னு தெரியல ஆனால் நான் இப்போ திருந்திட்டேன் மா "... என்று அவர் கூற,
அவளோ அவரது வருத்தம் தோய்ந்த முகத்தை கண்டு தானும் வருத்தமுற்றவள் , " இல்ல அதெல்லாம் இல்லை "..என்று அவள் மறுக்க,
" பரவால்ல மா அது தான் உண்மையும் கூட உன்ன பார்க்க நான் பல முறை முயற்சி பண்ணினேன் மா ஆனா எல்லாத்தையும் அந்த கடம்பன் அழிச்சுட்டான் மா...இதோ இப்ப தான் எனக்கு ஒரு சின்ன வழி கிடைச்சது மா அதுனால தான் நான் இப்போ சீக்கிரமா வந்தேன் மா நமக்கு பேசிட்டு இருக்க சமயம் இல்லமா எப்ப வேணாலும் அவனோட ஆள்கள் வந்து என்ன இங்கிருந்து வெளியேத்தலாம் நீ தயவு செஞ்சு என் கூட வா மா "... என்று அவசரப் படுத்த அவளும் மனமே இல்லாமல் அவருடன் செல்ல முடிவு செய்தாள்...இவர்கள் பேசி கொண்டிருப்பதை ஆயாவோ குறுகுறுவென பார்த்து கொண்டு இருக்க ஆயாவிடம் மட்டும் விஷயத்தை கூறி விட்டு அவள் கிளம்ப முடிவு செய்தாள்...
இதோ அவள் கடம்பஞ்சோலைக்கு மீண்டும் யோசிக்காமல் தந்தையுடன் வந்து விட்டாள்... இந்த முறை அவளது நண்பர்களுக்கும் நேரில் சென்று கூட தெரிவிக்க கால அவகாசம் களங்கண்டான் கொடுக்கவில்லை..
ஒரு குறுஞ்செய்தி மட்டும் அனுப்பிவிட்டு அவள் கிளம்பி விட்டாள்...விஷயத்தை கேள்விப்பட்டு அவளது நண்பர்கள் வந்து பார்க்கும் போது அவள் வீடு பூட்டி இருந்தது...
களங்கண்டானோ தன் மகளை அழைத்து வந்து அவரது மாளிகையை காட்டினார்..." இது தான் நம்ம வீடு இங்கே நான் மட்டும் தான் இருக்கேன் தனிமை எவ்வளவு கொடுமை என உணர்ந்துட்டு இருக்கேன் மா இனி நீ வந்துட்டியே அப்பாக்கு அது போதும் மா ".. என்று கூறியவர் ,
தன் மகளின் முகத்தை பார்த்து கொண்டே தான் அணிந்து இருந்த கோட்டையை அவிழ்க்க, அவரது உடலில் ஒரு கை இல்லாமல் இருந்தது...அதற்கு பதிலாக ஏதோ ஒன்று இருந்தது..
ஆம் அந்த கைகள் இருக்கும் பகுதியில் ஒரு ஸ்டீலினால் ஆன செயற்கை கை பொருத்தப்பட்டிருந்தது அதை கண்டவள் அதிர்ந்து, "உங்களுக்கு என்ன ஆச்சு??".. என்று கேட்க,
அவரோ மென்மையாக சிரித்து, " இதுவா நான் இப்படியாவது இருக்கிறேன்னு சந்தோசப்படு மா... எல்லாம் உன் புருஷன் பண்ணின வேலை தான் அதனால தான் என்னால உன்ன வந்து பார்க்க முடியல ...உனக்கு குழந்தை பிறந்த அன்னைக்கு தான் என்னோட ஒரு கை போச்சு அதுவும் எப்படி தெரியுமா??? என்று கேட்க ,
அவளோ அதிர்ந்து, " எப்படி உங்க கை போச்சு??"... என்று வினவினாள்..அவரோ அதை கேட்டதும் அன்றைய நாளை அவர் நினைக்கவே விரும்பாத நாளை எண்ண துவங்கினார்...
மான்ஸ்டர் வருவான்...
