Share:
Notifications
Clear all

மந்தாரம் 37

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 5 months ago
Messages: 483
Thread starter  

மந்தாரம் : 37

    "விது குழந்தையை அவகிட்ட கொடுத்திரு" என்று ரேவதி கூறினார்.. மகன் என்ன தவறு செய்தாலும் ஒரு தாய்க்கு தன் மகனை விட வேறு எதுவும் முக்கியம் இல்லையே..

மற்றவர்கள் தன் மகனை சிறுமைப்படுத்தும் போது தாய்க்கு கோபம் பெறுவதில் நியாயம் உள்ளதாக எண்ணிய ரேவதிக்கு தேவிகா தன் மகனை மட்டம் தட்டுவதை பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை..

அப்படி இருக்க, அவர் குழந்தையை கொடுக்க கூறவும், "அம்மா இருங்க நான் பேசிக்கிறேன்" என்றவன் அவளை பார்த்து, "ஏன் இந்த குழந்தையை நான் தூக்கினா குழந்தைக்கு ஏதாவது ஆகிடுமா??' என கோபமாக கேட்டான்..

அவனுக்கு அவளின் செய்கை மீது ஆத்திரம் கொண்டான்.. ஏனெனில் சாதாரணமாக அவள் இருந்திருந்தால் அவன் இக்குழந்தையை கண்டு கொண்டிருப்பானோ என்னவோ தெரியவில்லை.. அவள் என்னவோ இவனிடம் இருந்து பிரிப்பது போல பொத்தி பொத்தி பாதுகாக்கவும் அவனுக்கு சற்றே அதிகமாக எரிச்சல் ஆகியது.. என்றுதான் கூற வேண்டும் அதனால் வேண்டுமென்றே குழந்தையை கையில் பிடித்திருந்தான்..

அவளோ இவன் குழந்தையை கொடுக்க மாட்டேன் என்கிறானே என்ற ஆத்திரத்தில் அவன் அருகே நிற்க விருப்பம் இல்லாததும் சேர்ந்து கொள்ள, "குழந்தைக்கு எதுவும் ஆகாது ஆனா அந்த குழந்தையை தூக்குற தகுதி இருக்கான்னு நீங்க யோசிச்சுக்கோங்க.. குடுங்க குழந்தையை" என்று அவள் வெகுண்டு குழந்தையை வாங்க முனைய அவனோ பின்னோக்கி குழந்தையை இழுத்தவன் அவளை அழுத்தமாக பார்த்து அவள் பேசியதில் கோபம் மூண்டு, "உன் அளவுக்கு எனக்கு தகுதி இன்னும் குறைஞ்சு போயிடல.. குழந்தையை தூக்க என்ன குழந்தையை கூட வைக்கவே எனக்கு தகுதி இருக்கு அதை மறந்துடாத.. உனக்கு என்ன இந்த குழந்தை மீது உரிமை இருக்கோ அதே அளவுக்கு எனக்கும் உரிமை இருக்கு.. அதனால இந்த சீன் போடுற வேலை எல்லாம் என்கிட்ட வேண்டாம்" எனக் கூறினான்..

அதை கேட்டதும் அவளோ வெடித்து விட்டாள்.. ஆம் இருக்காதா பின்ன.. குழந்தையின் உரிமையைப் பற்றி பேசுகிறானே என எண்ணியவள், "தகுதி இல்லாத என்னை எதுக்கு மறுபடியும் கூட்டிட்டு வந்தீங்க?? எதுக்காக நான் பெத்த பிள்ளையை கையில தூக்கி வெச்சிட்டு இருக்கீங்க?? என்னை வேண்டாம் என்று சொன்னால் நீங்க எதுக்கு என் வயித்துல வந்த குழந்தையை வச்சிக்கிட்டு  இருக்கீங்க??

இதோ பாருங்க.. உங்களுக்கு ஏதோ வேலை ஆகணும்னு சொல்லி என்னை கூட்டிட்டு வந்து இருக்கீங்க.. அந்த வேலை என்னவோ அதை மட்டும் பாருங்க.. இந்த குழந்தையை தூக்குறது இந்த குழந்தை மேல பாசம் காட்டுற மாதிரி வர்றது.. குழந்தை உரிமை நாடகம் போடறது இந்த வேலையெல்லாம் வேண்டாம்..

நான் இந்த பெரியவங்களுக்காக இங்கே பொறுமையா இருக்கேன் என் பொறுமையை ரொம்ப சோதிக்காதீங்க.. உங்க திமிர், உங்க பணம், உங்க அகம்பாவம், உங்க ஆணவம் இதுக்கு எல்லாம் நான் இனியும் இரையாக மாட்டேன்..

ஏதோ ஒரு காலத்துல உங்களை ஆசைப்பட்டேன்.. அதுக்காக என் வாழ்க்கை முழுவதும் நான் அனுபவிச்சிட்டேன்... இனியும் என் பையன் அவனையும் நீங்க அப்படிங்கற ஒரு மாய பிம்பத்துக்குள்ள உள்ள கொண்டு வர எனக்கு விருப்பமில்லை..

என்னைக்கு உங்களுக்கும் என் வயிற்றில் பிறந்த என் மகனுக்கும் சம்பந்தமில்லை அப்படின்னு நீங்க சொன்னீங்களோ அதோட முடிஞ்சு போச்சு.. மறுபடியும் எதையும் நீங்க எதிர்பார்க்காதீங்க..

எந்த முகத்தை வச்சிட்டுங்க இப்போ என் குழந்தையை தூக்கிட்டு இருக்கீங்க??.. எப்படி கூசாம உரிமையா பேசுறீங்க??" என அவள் வெகுண்டு கேட்டாள்..

அவள் இந்த அளவுக்கு இறங்கி பேசுவாள் என அவன் எதிர்பார்க்கவில்லை.. அப்படி இருக்க, அவள் தன்னை பேசும் அளவுக்கு ஆகி விட்டாளா என கருதி, "ஏய் என்ன ரொம்ப பேசுற?? நீ எவன் கூடவோ குழந்தையை கவனிக்காமல் பேசிட்டு இருந்த..குழந்தை தண்ணீருக்குள் விழுந்ததும் காப்பாத்தினது என்ன தப்பா?? அதுக்கு ஓவரா குதிக்கிற??

இதை எல்லாம் நீ எவன் கூடவோ பேசிட்டு இருக்கும் போது இதெல்லாம் யோசிக்கணும்.. நான் இருக்கேன் எனக்கு தெரியாமல் உன் மகனை பொத்தி பாதுகாத்து வெச்சிருக்கணும்..

இப்ப என்ன என் கையால தான் நான் குழந்தையை காப்பாத்தினேன்.. நான் இவனை தொட்டா என்ன ஆகிடும் சொல்லு டி என்ன ஆகிடும்?? நான் உன்னை தொட்டதில் தானே இவனே வந்தான் என்ன மறந்துட்டியா.

உன்னை எப்போ அனுப்பனும்.. எப்போ கூட வைக்கனும்னு எனக்கு நல்லா தெரியும்.. அதுவரை கொஞ்சம் அடங்கி இரு.. ஓவரா துள்ளிட்டு இருக்காதே கண்டவன் கூட பேசிட்டு குழந்தையை பார்க்க துப்பில்லை நீ எல்லாம் பேசுற ஏன் டி??" என அவனும் சூடாக வார்த்தைகளை விட்டான்..

அதைக் கேட்ட ரேவதி வார்த்தைகள் தடிப்பதை பார்த்து, தன் கணவரை அழைக்க சென்றார்..

"நான் யார் கூட பேசினா உங்களுக்கு என்னங்க??? வார்த்தைகளில் கண்ணியம் நான் ஒன்னும் உங்களுக்காக இங்கே இருக்க கிடையாது.. நான் உங்க அப்பா அம்மா சொன்ன வார்த்தைக்காக தான் இங்கே இருக்கேன்.. ஒரு உண்மையை சொல்லனும்னா ஒரு அற்ப புழுவை பார்க்கிற மாதிரி தான் நான் உங்களை பார்த்திட்டு இருக்கேன்.. அந்த அளவுக்கு நீங்க என்னைப் பொருத்தவரை கேவலமா தெரியுறீங்க" என்று அவள் கூறினாள்..

அதை கேட்ட அவனுக்கு அவ்வளவு தான் மூளை சூடாகி விட்டது.. தன் மேல் மையல் கொண்டு அவன் தான் வேண்டும் என உருகி நின்றவளா இவள் இப்பொழுது இந்த அளவுக்கு இறங்கி பேசுகிறாள் என்பதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை... என்னவோ அவனுக்கும் அவளுக்கும் உள்ள உறவை இவள் முன்னால் நிலைநாட்டி ஆக வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு வந்தது..

"ஓ அப்படியா நான் இல்லாம தான் அவங்க வந்துட்டாங்களா?? இந்த வீட்டில் இருந்து என் கையில் இருக்கிற குழந்தை வரை நான் உனக்கு கொடுத்தது அதை மறந்துட்டியா?? ஏண்டி நான் மசியலன்னு சொல்லி அவங்களை சரிக்கட்ட பார்க்கறியா??" என அவன் கேட்டான்..

  இவனோடு பேசி பிரோயஜனம் இல்லை.. இப்படி தான் என்னை தேவை இல்லாமல் மன உளைச்சல் செய்வான் என எண்ணிய அவள், " முதல்ல என்னோட குழந்தையை கொடுங்க.. எனக்கு உங்க கூட பேச கூட விருப்பம் இல்லை.. எவ்வளவு சீக்கிரம் எனக்கு விவாகரத்து கொடுக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் விவாகரத்து கொடுக்கிற வேலையை பாருங்க.. எனக்கு உங்க வீடும் வேண்டாம்.. நீங்களும் வேண்டாம்.. உங்க உறவுகளும் வேண்டாம்.. என்னை விட்டால் போதும்" என கூறவும் அவனோ இவள் யார் என்னை அதிகாரம் செய்ய அதுமட்டுமின்றி இவளுக்கு என்ன திமிர் இருக்கும் என்னையே எதிர்த்து பேச என எண்ணிய விது,

"ஏன் அந்த ஆட்டோக்காரன் கூட போய் வாழவா?? அது எப்படி டி...  போற பக்கம் எல்லாம் ஒருத்தனை சரிக்கட்டி வைச்சு இருக்க?? இவன் எத்தனையாவது உனக்கு??" என மேலும் கீழுமாக பார்த்தவன், "பரவாயில்லை ஒரு பிள்ளையைப் பெத்தவ மாதிரி  இல்லை இதை எல்லாம் காட்டி தானே ஒவ்வொரு ஆம்பிளைங்களா மடக்கி கைக்குள்ள போட்டு வைச்சு இருக்க.. நீ போனா கூட அவன் விட மாட்டேங்கிறான் மணிக்கணக்கா பேசுற என்ன விஷயம்??" என அவன் நக்கலாக கேட்டான்..

வேண்டும் என்று தான் கேட்டான் அதில் எந்த விதமான மாற்றுக்கருத்தும் இல்லை.. அவனை மரியாதை இல்லாமல் பேசியதற்காக அவன் அவள் வலிக்க வேண்டும் வேதனைப்பட வேண்டும் என எண்ணினான்..

இங்கு அவனின் பேச்சை கேட்ட அவளோ அதற்கு மேல் பொறுமை இல்லாமல், "என்னை என்ன உங்களை மாதிரி நினைச்சிட்டு இருக்கீங்களா?? யார் கூட வேணாலும் போறதுக்கு?? அதெல்லாம் உங்க பழக்கம்.. ஒரு பெண்ணை எதிர்த்து நின்னா அடுத்த நிமிஷம் அவளுடைய ஒழுக்கத்தை பத்தி பேசி அவளை அடக்கி வச்சிடனும்.. அப்போ அவள் பேசவே மாட்டா..

அப்படித்தானே அதைத்தானே நீங்களும் பண்றீங்க??" என்று அவள் கேட்கவும் அவன் விழிகள் அதிர்ந்தது..

அவன் கண்ட தேவிகா இப்படி தெளிவோடு இருந்தவள் அல்ல.. எதற்கெடுத்தாலும் இப்படி குதித்து எழுந்து பேசுபவள் அல்ல.. அவன் கண்டு கொண்டிருக்கும் தேவிகா அவனுக்கு புதிதாக தெரிந்தாள்..

அவனுடைய அதிர்ச்சியை கண்டு, "என்ன பாக்கறீங்க நீங்க இப்படி எல்லாம் பேசுவீங்கன்னு எனக்கு முன்னாடியே தெரியும்.. நல்லவேளை வெற்றி கூட தானே இணைச்சு வச்சு பேசினீங்க.. எனக்கு அதைப் பத்தி கவலை இல்லை.. ஏன்னா உங்களுக்கு முன்னாடி நான் அவர பார்த்திருந்தேன் அப்படின்னா அவரைத்தான் இந்நேரம் நேசித்து இருந்திருப்பேன்.. அந்த அளவுக்கு அவர் நல்ல மனுஷன்.. உங்கள மாதிரி கிடையாது.. அதாவது இந்த நிலைமையிலும் எனக்காக அங்கு காத்துக்கிட்டு இருக்காரு உங்கள மாதிரி பல பொண்ணுங்க கூட இருந்துகிட்டு எங்களை அம்போன்னு விட்டவர் அவர் கிடையாது..

உங்கள விட 100 மடங்கு ஒழுக்கத்தில் சிறந்தவர் அவர் அவரைப் பத்தி பேசவெல்லாம் உங்களுக்கு தகுதியே இல்லை.. இதை உங்ககிட்ட நிரூபிக்கணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை.. ஆனாலும் சொல்றேன்..

இத்தனை வருஷம் ஆச்சு.
நான் வெற்றிக்கூட இருந்து அவருடைய சுண்டு விரல் கூட என் மேல பட்டது இல்லை.. அந்த  அளவுக்கு அவர் ஒழுக்கமானவர்.. அவர் எந்த இடத்திலும் என்னை நீங்க செஞ்ச மாதிரி என்னுடைய ஒழுக்கத்தையோ இல்லை காதலையோ நிரூபிக்க சொல்லல..சொல்லவும் மாட்டார்.. நீங்க எல்லாம் உரிமையை பத்தி பேச வந்துட்டீங்க??" என்று அவள் கண்ணீரோடு கூறினாள்..

இந்த முறை அவளுடைய பேச்சில் மேலும் அதிர்வது அவன் முறையாகியது.. அவள் பேசிய பேச்சு அவனை செருப்பால் அடித்தது போல அவனுக்கு இருந்தது..

ஆம் அவன் அவளை நிரூபிக்கச் சொல்லித்தானே இப்பொழுது அவன் கையில் இருக்கும் குழந்தை இந்த பூமிக்கு வந்தான்.. அப்படி இருக்க அந்த நொடி அவனுக்கு அது நியாபகம் வந்து போனது..அதனால் அவன் முகம் கறுத்து போனது...

ஆம்.. அவன் என்ன பேசினாலும் அவள் கண்களில் அவன் மீது கொண்டுள்ள நேசம் அவனுக்கு தென்படும்.. நாய்க்குட்டி போல அவன் என்ன சொன்னாலும் கேட்டுக் கொண்டு இருந்த அவள் இல்லை இவள்..

இவள் கண்களில் அவன் மீதான கோபம் தெளிவாக தெரிய அது அவனை என்னவோ செய்தது...

அதே நேரம் அவனுடைய அகம்பாவம் வெளியே வந்து, "என்ன டி திமிரா??" என அவனுக்கு இருந்த ஆத்திரத்தில் அவளுடைய கழுத்தை பிடித்தான்..

ஒரு கையில் குழந்தையும் மறுக்கையில் அவளுடைய கழுத்தை அவன் பிடிக்க அவளுடைய கழுத்து அவனின் அழுத்தத்தால் வலிக்க ஆரம்பித்தது..

அவள் வலியால் துடித்தாலும், "என்னை விடுங்க.. உண்மையை சொன்னா கசக்குதா?? பொம்பளை தோலுக்கு நீங்க அலையிற  மாதிரி என்னையும் பேசுறீங்க.. வார்த்தைகளில் கவனம் ரொம்ப முக்கியம். நீங்க என்னதான் என்னை பண்ணினாலும் பரவாயில்லை.." என்று அவன் பிடியில் இருந்து கொண்டே அவள் பேசப்பேச அவனின் கைகளில் அழுத்தம் கூடியது..

அவளால் மூச்சு விட முடியவில்லை.. அதன் காரணமாக அவள் கண்களில் கண்ணீர் வர, அதுவரை இயல்பாக அவன் கைகளில் இருந்த ரூபன் தன் அம்மா இவனிடம் கஷ்டப்படுகிறாள் என்பதை உணர்ந்து கொண்டானோ என்னவோ அவள் கண்களில் கண்ணீரை கண்டதும் பெற்ற மகனுக்கு அம்மா துடிக்கிறாள் என்பதை புரிந்து கொண்டான்..

எந்த குழந்தையும் அம்மா கண்ணீர் விட்டால் குழந்தைக்கு அழுகை வருமே அதுபோல குழந்தை அழுக ஆரம்பித்தான்..

உடனே  விதுவை அடித்து, "என்னை விடு.. என்னை விடு.. நீ வேண்டாம்.. நீ வேண்டாம்.. அம்மா வா போலாம் வெற்றி அப்பாட்ட போலாம்.. வெற்றி அப்பா வேணும்" என்று குழந்தை இங்கு வந்த இரண்டு நாட்களில் இங்குள்ள ஆடம்பரத்தை எல்லாம் கண்டு வெற்றியை தேடவே இல்லை..

ஆனால் முதன் முறையாக இந்த காட்சியை கண்டதும் வெற்றி வெற்றி என கத்த துவங்கியதும் ஏனோ அந்த இடத்தில் விதுவின்  முகம் மாறியது..

அதற்குள் ரேவதி ராம் மோகனை அழைத்து வர இந்த காட்சியை கண்ட ராம் மோகன், "விது.. என்ன இது.. அவளை விடு" என கத்த அவன் அவளை விட்டான்..

அவன் விட்டதும் அவள் பெரிய மூச்சுக்களை எடுத்து விட்டவள் அவன் கைகளில் இருந்த ரூபன் அழவும் வேகமாக குழந்தையை அவனிடமிருந்து பிடுங்கியவள் குழந்தையை சமாதானம் செய்யும் பொருட்டு, "வா நாம வெற்றி அப்பாகிட்ட பேசலாம்" என கூறி குழந்தையை அழைத்து சென்றாள்..

குழந்தையும், "வெற்றி அப்பா கிட்ட போலாம் அம்மா.. அப்பா தான் வேணும்" என அழுது கொண்டே கூறினான்.. அவளும், "சரி கண்ணா போலாம்" எனக் கூறி கொண்டே செல்வது அவனுடைய காதுகளை நிறைத்தது..

அந்த சமயம் பார்த்து ராம் மோகன், "என்ன டா இதெல்லாம்.." என கேட்க அதெல்லாம் விதுவின் காதுகளில் அந்த நொடி விழவில்லை..

அவன் உதிரம் யாரோ ஒருவனை அப்பா என்றழைப்பது மட்டும் தான் அவன் காதுகளில் விழுந்து கொண்டே இருந்தது.. அது என்னவோ அவனை செய்தது.. அது என்னவோ அவனை பாதிப்படைய வைத்தது..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top