நெஞ்சமெல்லாம் 22
அத்தியாயம் - 22
"ஏன் பொடி வாண்டு படிக்காம இருந்தா நாளைக்கு எப்படி பெரிய பொண்ணா வளர்வது?" என்று அவன் கேட்டான்.
அவளோ "இப்பவே பாருங்க உங்க உசரத்துல பாதி வந்துட்டேன் அப்படியே நான் வளர்ந்துப்பேன் மாமா" என்று பதில் அளித்த அவள் அவனைப் பார்த்து ஓரக்கண்ணால் சிரித்தாள்.
அதைக்கண்ட அவனோ, "எதுக்கு என்னை பார்த்து சிரிக்கிற அஞ்சுமா??" என்று கேட்க அவளோ அவனை பார்த்து, "நீங்க நிவேதா அக்காவை ரூட்டு விடுறீங்களோனு எனக்கு ஒரு சந்தேகம்??" என்று அவள் கேலியாக கூற இவனுக்கோ புரையேறியது.
"யார் சொன்னா அப்படியெல்லாம் இல்லையே??" என்று மழுப்பலாக பதில் அளித்தான்.
அதைக்கண்ட அவளோ, "இல்லையே இத்தனை வருஷமா வராதவங்க வந்து இருக்கீங்க.அதுவும் நீங்க இடையில இடையில நிவேதா அக்காவை பத்தி தான் என்கிட்ட பேசறீங்க. அந்த அக்காவை எங்க போனா பார்க்கலாம்னு கேட்குறீங்க. இதெல்லாம் பார்க்கும்போது எனக்கு சந்தேகம் வராதா?? இப்ப உண்மையை சொல்ல போறீங்களா இல்லை அந்த கிழவிகிட்ட சொல்லவா அப்படியே அடுப்படில உங்களை வைச்சு சமைச்சுடுவா கிழவி" என்று பெரிய மனுஷி போல அவனிடம் பேசினாள்.
அதைக்கண்டவனும் அவள் தலையில் கொட்டு போட்டு, "உனக்கு படிப்பு தான் இல்லைன்னு பார்த்தா மூளை நல்லா வேலை செய்யுது பொடி வாண்டு" என்று கூறி அவளது தலையில் தட்டினான் துருவன்.
அவளோ விடாமல், "மாமா சொல்லுங்க மாமா நீங்க அந்த அக்காவை விரும்புறீங்க தானே சொல்லுங்க மாமா?" என்று அவள் கேட்க,
அவனும், "ஆமாம் அஞ்சுமா அவளை நான் காதலிக்கிறேன் அவளுக்காக தான் நான் இங்கே வந்தேன் அவளும் நானும் ஒரே காலேஜில்தான் படிக்கிறோம்" என்று அவளிடம் எல்லா உண்மையும் கூற அவளோ கைதட்டி சிரித்தாள்.
"அப்போ ஜாலிதான் நிவேதா அக்கா எங்கேயும் போக மாட்டாங்க இங்கேயேதான் இருக்கப் போறாங்க ரொம்ப நல்ல அக்கா உங்களுக்கு சரியான ஜோடி தான்" என்று கூறிய அவள் தான் அவனுக்கு அங்கே இருக்கும்வரை காதல் தூது சென்றுக் கொண்டிருந்தாள்.
ஆம் இவன் கூறும் விஷயத்தை அங்கேயும் நிவேதா கூறும் விஷயத்தை இவனிடமும் காதல் தூது சென்று இருவருக்கும் இடையில் பாலமாக இருப்பது என்னவோ காவ்யா தான் அவளுக்கு அதில் ஒரு சந்தோஷம். என்னவென்று சொல்லத் தெரியவில்லை துருவன் மாமாவுக்கு ஏத்த ஜோடி நிவேதா தான் என எண்ணினாள் அந்த சிறு பெண்.
அப்படி சென்றுக் கொண்டிருக்கும் பொழுது தான் அவர்களது விடுமுறை காலமும் முடிந்து இருவரும் பழையபடி கல்லூரிக்குச் சென்றனர் இப்படியே ஒரு வருடம் போனது இருவருக்குமே தெரியவில்லை. இப்பொழுது துருவன் அந்த கல்லூரியின் கடைசி வருடத்தில் இருந்தான்.
நிவேதா மூன்றாம் வருடத்தில் படித்துக் கொண்டிருந்தாள். இருவரின் காதலும் நகமும் சதையும் போல நாளுக்கு நாள் வளர்ந்துக் கொண்டே தான் இருந்ததே தவிர ஒரு நாளும் அவர்களின் காதலின் ஆழம் குறையவில்லை.
படிப்பு முடிந்ததும் ஓரிரு வருடங்கள் கழித்து திருமணம் செய்துக் கொள்ளலாம் மேலும் துருவனும் இங்கேயே அவளுக்காக தங்கி விடலாம் என முடிவு செய்திருந்தான். ஏனெனில் லண்டன் வரவோ பகட்டான வாழ்க்கை வாழவோ அவளுக்கு விருப்பம் இல்லை. அவளுக்கு இங்கேயே அவளுடைய கிராமத்தில் வாழ்க்கையை நகர்த்த வேண்டும் என்ற எண்ணம்தான் நிவேதாவின் மனதில் ஓட அதை தன் காதலனிடம் அவள் கூறியிருக்க துருவனும் அவளது மனதை புரிந்துக் கொண்டு சரி என ஒப்புக் கொண்டான்.
இதற்கிடையே கீதா துருவனிடம் அவளது மனதை வெளிப்படுத்தினாள் நான் உன்னை காதலிக்கிறேன் என்று துருவனை பார்த்து கூற நிவேதா ஏற்கனவே கூறியிருப்பது போல அவன் அவளுடைய காதலை திருமணம் நடக்கும் வரை யாரிடமும் கூறாமல் வைத்திருந்தான். தாய் தந்தையிடம் கூட வெளிப்படுத்திக் கொள்ளவில்லை காவ்யா அவள் ஒருத்திக்கு மட்டும் தான் எல்லா விஷயமும் தெரியும்.
அப்படி இருக்க கீதா அவள் மனதை அவனிடம் கூறவும் அவன் என்ன சொல்வதென்று தெரியாமல், "சொந்தத்துல எனக்கு திருமணம் செய்துக்கொள்ள விருப்பமில்லை கீது நீ தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம்" என்று கூறினான்.
அதை உதாசீனம் செய்வது போல கீதா உணர அவள் அவனிடம் பேசுவதை குறைத்துக் கொண்டு எப்போதும் அவனை அறவே வெறுத்தாள். அவளுக்கு நிவேதாவின் மீது இவன் ஆசை வைத்திருக்கிறானோ என்ற சந்தேகம் எழாமல் இல்லை. ஏனெனில் கடந்த வருடம் நடந்த கோவில் திருவிழாவில் இருவரும் சிரித்துக் கொள்வதையும் தனியாக பேசிக் கொள்வதையும் இவள் கண்கூட கண்டு இருந்தாளே...
அன்றிலிருந்து இவளுக்கு மனதளவில் இது ஒரு கேள்வியாக இருக்க அதை நிரூபிக்கும் வகையில் இவன் அவளை நிராகரிக்கவும் கீதா முடிவே செய்து விட்டாள் இருந்தும் தன்னை வேண்டாம் என்றவனிடம் திரும்ப போய் கெஞ்ச அவளுக்கு மனம் இல்லை. அதனால் சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்பதுபோல அவள் அவனை வெறுக்க துவங்கினாள்.
அவனை அவள் அதன் பிறகு கண்டு கொள்வதில்லை அப்படி இருக்கும் பொழுது தான் துருவன் அவனது கடைசி வருட கல்லூரியின் ப்ரொஜெக்டிற்காக அவன் ஒரு கம்பெனியில் சேர்ந்து அங்கு அவனது கல்லூரி ப்ராஜெக்ட்டை செய்துக் கொண்டிருந்தான். அதனால் அவனை நிவேதாவால் சரியாக பார்க்க முடியவில்லை பேச முடியவில்லை சென்னையில் இருக்கும் வரை இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டனர்.
துருவனும் அவனால் முயன்றவரை அவளை சந்திப்பது பேசுவது என்று இருந்தான். அந்த சமயம் பார்த்து தான் நிவேதாவுக்கு தேர்வு வர இருப்பதாகவும் அது முடிந்ததும் கல்லூரியில் 15 நாட்கள் விடுமுறை வருவதாக அவனிடம் கூறினாள்.
மேலும் அந்த சமயம் பார்த்து ஊருக்கு செல்ல காத்திருந்தாள் நிவேதா. ஆனால் துருவன் "நீ இந்த முறை ஊருக்கு போக வேண்டாம் நாம இங்கேயே இருக்கலாம் எனக்கும் ஒரு ரெண்டு நாள் லீவு வருது" என்று கூற அதைக்கேட்ட அவளும் யோசித்தாள்.
"இல்ல துருவ் அம்மா என்ன சொல்லுவாங்களோ அதுதான் யோசிக்கிறேன்" என்று கூற துருவன், "ஏதாவது ப்ராஜெக்ட்ன்னு பொய் சொல்லு" என்று கூற அவளும் தயங்கி தயங்கி இதுநாள்வரை தன் தாயிடம் பொய் கூறாதவள் தன் காதலனுக்காக தன் தாயிடம் பொய் கூற தாயும் பாவம் நம்பினார்.
மந்தாரம் தெளியும்...
Currently viewing this thread 2 guests.
