Share:
Notifications
Clear all

இராட்சதன் 35

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 7 months ago
Messages: 540
Thread starter  

அத்தியாயம் : 35

"என்னடி மரியாதை எல்லாம் தேயுது உன்னோட மகள் எங்க இருக்கா??? பக்கா பிளான் போட்டு என்னை அசிங்கப்படுத்திட்டாங்க அவ எங்க போனாலும் சரி சும்மா விடுவேன் மட்டும் நினைக்காத என் சோத்தை தின்னுட்டு எனக்கு எதிராவே அவன் கூட சேர்ந்து கூட்டு சதி பண்ணிருக்காளா" என அவரின் சிகையை பிடித்து உலுக்கி உலகநாதன் கேட்டார்..

"அவ எங்கே இருந்தா என்ன??? இந்த ஜெயில்ல இருந்து அவ தப்பிச்சிட்டா இல்ல இனி அவ பிழைச்சுப்பா நல்லா இருப்பா அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு"  என்க

"அப்படியெல்லாம் உன்னோட மகளை நான் விட்டு விட மாட்டேன் சும்மாவே விடமாட்டேன் இப்போ என் பேரு வேற கெட்டுப் போயிருக்கு அவ்வளவு சீக்கிரம் உன்னோட மகளை நான் விட்டுடுவேனா இங்க கூட்டிட்டு வந்து அவளை கொலை பண்ணாம நான் விட மாட்டேன்.. அந்த சூரிய பிரகாஷையும் நான் அழிக்காமல் விடமாட்டேன்" என்று முகத்துக்கு நேராக ஆடாமல் அசையாமல் தெளிவாக அவர் ஒவ்வொரு வார்த்தையாக கூறவும் அதைக் கேட்ட காவேரியின் முகம் ஆத்திரத்தில் சிவந்தது.. கூடவே கணவன் தன் மகளை ஏதாவது செய்து விடுவாரோ என்ற அச்சமும் வந்தது..

அதுவரை தன் சிகையை அவருடைய கையில் கொடுத்திருந்த காவேரி பிறகு பத்ரகாளி அவதாரம் எடுத்தார்..

"என்னடா சொன்ன அந்த புள்ள ஓடிப் போனாலும் பொழைக்க விடமாட்டேன் கூட்டிட்டு வந்து கொன்னு உன்னோட மானத்தை காப்பாற்ற போறியா?? உன்னோட மானம் என் பொண்ணு மூலமா போகல உன்னோட நடத்தையும் உன்னோட மகன் நடத்தையின் காரணமாகத்தான் போய் இருக்கு என்னோட மகள் பெயரைச் சொல்லித்தான் இந்த விஷயம் ஊர் மக்கள் மத்தியில் வெளியே வந்திருக்கு" என்று கூறிய காவேரி அவருடைய சட்டையைப் பிடித்து உலுக்கி எடுக்க தன் மனைவியின் இந்த அகங்கார பேச்சை ஏற்றுக் கொள்ள முடியாத உலகநாதன்," என்னடி ஆம்பளைய எதிர்த்து நிற்கிறயா.. இப்போ தெளிவா தெரிஞ்சு போச்சு டி இதுக்கு காரணம் நீ தானே உன்னோட மக எங்க இருக்கான்னு உனக்கு நல்லா தெரியும்.. நீ செத்தா உன்னோட பொணத்த பாக்க உன் மக வந்து தானே ஆகணும்" என்று கேட்டு அவரை போட்டு அடிக்க அந்த சமயம் பார்த்து வீட்டுக்குள் நுழைந்தான் தினகரன்...

"என்னப்பா ஆச்சு ஏன் அம்மாவை போட்டு அடிக்கறீங்க?? டேய் நீ சொன்னது எல்லாம் உண்மை தான் அந்த ஓடுகாலி ஓடுனதுக்கு உன்னோட அம்மா தான் காரணம் இவதான் அவளை அனுப்பி வச்சு இருக்கா நம்ம முன்னாடி எதுவுமே தெரியாதவ மாதிரி நடிச்சிட்டு இருக்கா" என அவர் கூற

அதைக் கேட்டு அவனும் அதிர்ந்து,"அப்போ எல்லாம் பிளான் தான் பா அவ எங்க இருக்கான்னு நான் கண்டுபிடிச்சிட்டேன் இதோ கொடைக்கானல் இருக்கா அதுவும் யார் கூட இருக்கா தெரியுமா அந்த சூரிய பிரகாஷ் கூடத்தான் இருக்கா...நான் தான் சொன்னேன்ல ப்பா.. அம்மாவுக்கு விஷயம் தெரியும்னு நான் அப்பவே சொன்னேன் நீங்க தான் நம்பல இப்ப பாருங்க என்ன நடந்திருக்குன்னு எல்லாரும் சேர்ந்து நமக்கு எதிரா சதி பண்ணி இருக்காங்க இவங்களை சும்மா விடக்கூடாது.. " என மகனும் சேர்ந்து அடித்தான்..

அவனின் ஆண்மை போன ஆத்திரம் அவருக்கு எக்கச்சக்கமாக இருந்தது.. அதனால் தாய் என்றும் பாராமல் அடித்தான்..

உலகநாதன் ஒரு படி மேலே போய் ,"இப்போ என்னடி சொல்ற உன்னோட மக ஊட்டியில் இருக்கலாம் அதுவும் அவன் கூட தான் இருக்கா இப்ப தெரியுதா உன்னோட மக அவன் கூட சேர்ந்து எனக்கு சதி பண்ணிட்டு இருக்கா நான் இங்க அசிங்கப்பட்டு நாறி போய் இருக்கேன் அவளுக்கு கூத்தடிக்க அவன் கூட போயிருக்காளா?? டேய் தினகரா இவளை சும்மா விடாதே.. இவளை கொன்னுட்டு அவளை முடிப்போம்" என்று உலகநாதன் கத்தினார்..

கணவன் மற்றும் மகன் இருவரும் அடிக்க அடி தாங்க முடியாத அவர் கீழே விழ அப்போதும் இவர்கள் விடாமல் அடிக்க, காவிரியின் மனதிலோ மகள் இருக்கும் இடம் இவர்களுக்கு தெரிந்து விட்டதே இவர்கள் ஏதாவது செய்து விடுவார்களா என்று பயந்தார்..

அதற்கு தகுந்தது போலவே தினகரன்," அப்பா நான் இப்பவே அவளை போட்டு தள்ள சொல்றேன்" என்க

"அதை செய் முதல்ல ஆனால் அவளோட உயிரு இங்க தான் போகணும் அந்த நாயை விட்டுடாத நம்ம யாருன்னு அவனுக்கு தெரிஞ்சே ஆகணும்.. எவ்வளவு செலவானாலும் பரவால்ல அவங்க ரெண்டு பேரையும் விடக்கூடாது இவ கதையை முடிச்சிட்டு அவங்க கதையும் முடிக்கணும்" என்க

அதை கேட்ட தினகரன் சரிப்பா என ஃபோனில் ரவுடிகளுக்கு அழைக்க, இதை எல்லாம் கேட்டவர் அதிர்ந்து இவர்கள் ஏதாவது செய்து விடுவார்களோ என பயந்து, ஒரு கட்டத்தில் தன்னை காப்பாற்றி கொள்ள சற்றும் முன் காய்கறி அரிந்து கொண்டு இருந்த அரிவாள்மனை எடுத்து மீண்டும் அடிக்க வந்தவர்கள் உடலில் காணும் இடமெங்கும் வெகுண்டு எழுந்து கீறல் போட்டார் காவேரி..

தான் தொடங்கி வைத்த இந்த அத்தியாயத்தை தானே முடிக்க வேண்டும் என நினைத்த காவேரிக்கு மனதில் அவ்வளவு ஆத்திரமும் வெறியும் இருந்தது அதனால் எதைப் பற்றியும் அவர் யோசிக்கவில்லை தன்னுடைய உயிர் போனாலும் பரவாயில்லை தன் மகள் பிழைக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும்தான் அந்த தாய்க்கு இருந்தது..

நித்யாவின் மரணத்திற்கும் தன் குடும்பத்திற்கு ஏற்பட்ட அவமானத்திற்கும் தன் மகளின் நிலைமைக்கும் காரணமாக இருந்த தன் கணவன் மற்றும் தான் பெற்ற மகன் என்று கூட பார்க்காமல் சரமாரியாக தாக்கினார்..

அதில் ஆங்காங்கே பல வெட்டுகள் இருவரின் உடலிலும் ஆகி இருக்க சத்தம் கேட்டு ஓடி வந்தவர்கள் மூவரையும் விலக்கி விட அரிவாள்மனை கையில் வைத்துக்கொண்டு அனைவரும் முன்னிலையிலும் தன் கணவன் மற்றும் மகனின் முகத்தைப் பார்த்து காரி உமிழ்ந்து ,"இனி இந்த வீட்ல நான் இருக்க மாட்டேன் நீங்களும் இருக்கக்கூடாது இது அத்தனையும் என்னோட அப்பா சம்பாதிச்ச சொத்து..வீட்டை விட்டு வெளியே போங்கடா.. உங்களை அவ்வளவு சீக்கிரமாக நான் கொன்னுட மாட்டேன் கொல்லனும்னு ஆத்திரம் இருக்கு ஆனா செய்ய மாட்டேன் இந்த சொத்து அத்தனையும் என் பெயரில் வரணும் வர வைப்பேன் இனி நீங்க ரெண்டு பேரும் இந்த ஊரில் எப்படி நிம்மதியா வாழ்ந்திடறிங்கன்னு நான் பார்க்கிறேன்..

என் அப்பா காசிலே வாழ்ந்துட்டு என் மகளையே அந்த காசை வச்சு கொல்ல பாக்குறீங்களா விடமாட்டேன்..

என்னோட பொண்ணு உன்னை அசிங்கப்படுத்தினால் தானே சொல்லிட்டு திரியற இதோ இத்தனை பேர் முன்னாடி உன்னோட கௌரவத்தை நான் சந்தி சிரிக்க வைக்கிறேன்"  என்று கூறியவர் ஒரு கையில் அரிவாள்மனை மறுக்கையில் உலகநாதன் அவருக்கு அணிவித்த தாலியை கழற்றி உலகநாதன் முகத்தில் எறிந்தவர் ,"இன்னையோட உனக்கும் எனக்கும் உள்ள பந்தம் முடிஞ்சு போச்சு இதை வச்சுட்டு தானே நீ ஏமாத்திட்டு இருந்த இந்த தாலி எனக்கு தேவையில்லை.. மரியாதையா இந்த வீட்டை விட்டு வெளியே போற வழியை பாரு இல்ல போக வைப்பேன். இந்தக் கேடுகெட்ட ஆளுகளுக்கு யாரும் துணை போகாதீங்க இவன்தான் எல்லாத்துக்கும் காரணம் நித்யா செத்ததுக்கும் இவன் தான் காரணம்.. என் குடும்பம் அழிஞ்சு போனதுக்கும் இவன் ஒருத்தன் தான் காரணம்.. ஊர் மக்கள் முன்னாடி நடிப்பான் நம்பிடாதீங்க" என்று பிரச்சனை விலக்க வந்த ஆட்கள் முன்னால் கூறிவிட்டு வெறும் கழுத்தோடு கையில் அரிவாள் மனையோடு தன் அண்ணன் ரத்தினம் வீடு நோக்கி சென்றார் காவேரி…



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top