வேந்தன் : 7
அத்தியாயம் : 7
புது இடம் புது வீடு எல்லாமே புதிதாக இருந்தது.. எங்கு எது இருக்கிறது என்றே அவளுக்கு தெரியவில்லை...காலையிலேயே குளித்து முடித்து விளக்கு வைத்தவள் சமையல் கட்டில் நுழைந்து ஒவ்வொரு டப்பாவாக திறந்து பார்த்து உருட்டி கொண்டு இருந்தாள்...
அந்த உருட்டலில் சோபாவில் படுத்து இருந்தவன் கண்ணை திறந்து அவளை பார்க்க அவளோ எதையோ தேடுவது புரிய," என்ன தேடுற??", என்றான்..
"சமைக்க ஏதாவது இருக்கான்னு பார்க்கிறேன்" என்க
அவனோ ,"எனக்கு அளவில் தான் இங்கே இருக்கும் உனக்கு என்ன வேணும்னு சொல்லு ஆர்டர் போடுறேன் கொஞ்ச நேரத்தில் கொண்டு வந்து கொடுத்திடுவாங்க" என்க
அவளும் என்ன எல்லாம் வேணும் என்று சொல்ல, அதை எல்லாம் குறிப்பு எடுத்துக் கொண்டவன் அந்த பொருட்களை எல்லாம் ஆர்டர் செய்தான்...
புது கல்லூரி வேறு புது இடம் என்ற படபடப்பு அவளுக்கு இருக்க அவன் எப்போதும் போல எழுந்து குளிக்க சென்றான்... அவன் குளித்து வருவதற்குள் அவன் ஆர்டர் செய்த பொருட்கள் எல்லாம் வர அவளோ ,"இதை எடுத்து வைச்சு சமைச்சு??? எப்போ போறது" என யோசிக்க அவனோ குளித்து தயாராகி வந்தவன் அவளை பார்த்து," நீ ரெடி ஆகலயா??" என கேட்டான்...
"நான் இன்னும் சமைக்கல உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க நான் சமைச்சிடறேன்" என்க
அவனோ அவளை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்து ,"நீ எனக்கு பொண்டாட்டி வேலை பார்க்க இங்கே வரல படிக்க வந்து இருக்க புரியுதா?? படிக்கிற வேலையை மட்டும் பார்" என்றான் கண்டிப்பாய்
அதை கேட்ட அவளோ திகைக்க ,"இன்னைக்கு லேட் ஆகிடுச்சு உனக்கு என்ன வேணுமோ நீ சமைச்சு சாப்பிடு எனக்கு எதுவும் சமைத்து தர வேண்டாம்..எனக்கு என்ன வேணுமோ அதை நான் செஞ்சுப்பேன்" என்றவன் அவள் கிச்சனில் நின்று கொண்டிருக்கும் போதே அவனும் உள்ளே நுழைய அவளோ ஒரு அடி தள்ளி நிற்க அவனோ அவளை கண்டு கொள்ளாமல் ஒரு ஃப்ரை பேனை எடுத்தான்...
அதில் இரண்டு முட்டைகளை உடைத்தவன் பெப்பர் , உப்பு மட்டும் கலந்து இரண்டு பிரெட்டை டோஸ்ட் செய்தவன் அதில் சில வெள்ளரி மற்றும் தக்காளி துண்டை கூட வைத்தவன் சாப்பிட துவங்க அவளோ அவனை வாயை பிளந்து பார்க்க அவள் பார்ப்பதை பார்த்தவன் ,"உனக்கு வேணுமா???" என்க
"இல்லை வேணாம் மதியத்துக்கு உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க நான் சமைக்கிறேன் இதை எல்லாம் எப்படி சாப்பிடுறீங்க???" என அவள் கேட்டாள்...ஏனெனில் அவளால் இதை எல்லாம் ஒரு உணவாக எடுத்து கொள்ள முடியவில்லை..
அவளை பார்த்து முறைத்து, "இப்படி தான் ஐந்து வருஷமா சாப்பிடுறேன் ஒன்னும் ஆகலையே!!" என்க
"இது எல்லாம் சாப்பிட்டா நல்லாவே இருக்காது உடம்புக்கும் கேடு... எப்படி தான் இதை எல்லாம் சாப்பிடுறீங்க???? இனி நான் வந்துட்டேன்ல இனி இதை எல்லாம் சாப்பிடாதீங்க நானே எல்லாம் செஞ்சு தரேன்!!!" என எதார்த்தமாக கூறினாள்...
அதை கேட்டவன் அவளை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தான் எங்கோ எப்போதோ ,"எப்படி டா இதை சாப்பிடுற??? நான் தான் வந்துட்டேன்ல இனி இதை எல்லாம் சாப்பிடாத" என மாயா கூறுவாள் அதேபோல இவள் கூறவும் அவனுக்கு நொடிப்பொழுதில் மாயாவின் ஞாபகம் வந்து போனது அதன் பிறகு அவன் முகம் கடுகடுவென மாறியது... அதன் பிறகு அவனுடைய குணமே மாறியது போல இருந்தது...
அவளை அழுத்தமாக பார்த்தவன் அவன் கையில் இருந்த ரொட்டி துண்டுகளை அப்படியே வைத்தான்.. பிறகு அவள் பக்கமாக ஒரு அடி நெருங்கி நின்றவன் அவளைப் பார்த்து மார்பில் கையை கட்டி ,"இதுதான் உனக்கு லாஸ்ட் வார்னிங் என் மேல அக்கறையா நினைச்சு எனக்கு ஏதாவது செய்யணும்னு நினைச்ச உன்னை தொலைச்சிடுவேன் புரியுதா???" என கூற,
அவன் கண்ணில் தெரியும் கோபத்தை பார்த்தவள் அப்படியே அரண்டு விட்டாள்..அவனை பயந்து ஒரு அடி பின்னால் அவள் செல்ல அவளின் கண்ணில் தெரியும் பயத்தை பார்த்து அவன் தன்னை நிலைப்படுத்தி கொண்டவன்," லுக் மறுபடி மறுபடி என்னை பேச வைக்காத இங்கே நீ வந்திருக்கிறது படிப்பதற்காகத்தான் தாலி கட்டி இருக்கேன்னு சொல்லி எனக்கு பொண்டாட்டி வேலை செய்ய நீ வரல அண்ட் இது புது இடம் புது காலேஜ் அங்க நீ கல்யாணம் ஆனவ என்று சொல்லிட்டு இருக்காத புரியுதா??? யார்கிட்டேயும் நான் தான் உனக்கு புருசன்னு சொல்ல கூடாது நீயும் கல்யாணம் ஆனவன்னு சொல்ல கூடாது" என்றான்...
அவன் அருகே நின்று அவளைப் பார்த்து கோபமாக கூறவும் அவள் தலையை மட்டும் ஆட்ட ,"நீ படிச்சு முடிக்கிற வரைக்கும் உனக்கு கல்யாணம் ஆகி இருக்கு என்கிற விஷயத்தை நீ யாருக்கும் சொல்லக்கூடாது படிப்பு மட்டும் தான் உன் முன்னாடி இருக்கணும் புரியுதா?? அப்புறம் அதை செய்யறேன் இதை செய்கிறேன் என்று சொல்லி என்னை இரிடேட் பண்ணின பல்ல கழட்டிடுவேன்.. உன் வேலை என்னவோ அதையே பாத்துட்டு இரு உனக்கு ஏதாவது வேணுமா அதை மட்டும் கேளு மத்தபடி என்னை டிஸ்டர்ப் பண்ற வேலை எல்லாம் வேண்டாம் ஓகே...என்னை பார்த்துக்க எனக்கு நல்லா தெரியும்" என்றவன் கண்ணுக்கு அவன் கட்டிய தாலி தென்பட அதை பார்த்து அவனுக்கு மேலும் குற்ற உணர்ச்சி தான் வந்தது ,"முதல்ல அந்த தாலியை கழட்டி வை" என்று கூறிவிட்டு சென்றான்...
அவன் பேசியதை கேட்டு அவளுக்கு பசியே இல்லை கழுதையிடம் இருந்து தப்பித்து புலியிடம் மாட்டியது போல தான் அவள் நிலை இருந்தது..
"என்ன பேச்சு பேசிட்டு போறாங்க தாலியை கழட்டி வைக்கவா இவங்களுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு" என ஊர் பக்கம் வளர்ந்த பெண்ணாக அவள் அந்த நேரம் யோசித்தாள்...
அவளைப் பொறுத்தவரை அவன் அவளுக்கு தாலி கட்டியதை கூட பொறுத்துக் கொள்வாள்...அவன் தாலி கட்டிய பின் தான் அவள் மிகவும் பாதுகாப்பாக உணர்கிறாள்..தனக்கு ஏதாவது என்றால் உரிமையோடு அவனிடம் அவளால் இயல்பாக கேட்க முடிவது போல அவளுக்கு பல நேரங்களில் தோன்றியது உண்டு... அவன் விவாகரத்து மற்றும் தாலியை கழட்டி வைக்கவெல்லாம் சொல்லவும் அவளால் அதை பொறுத்துக் கொள்ளவே முடியாத காரியம்..
அப்படி இருக்க, "என்னை சொல்லணும் அவங்க குணம் தெரிஞ்சும் நான் போய் அவங்களுக்கு செஞ்சு தரேன்னு சொன்னேன் பார் என்னை சொல்லணும்..இனி அவங்க சாப்பிட்டா என்ன சாப்பிடலன்னா என்ன???" என எண்ணியவள் ஒரு டம்ளர் பாலை மட்டும் சூடு பண்ணி குடித்து விட்டு காலேஜ் செல்ல தயாராகினாள்...
பொன்மஞ்சள் தாலி இன்னும் கொண்டு அவள் கழுத்தில் இருக்க முதலில் அதை எடுத்து தன் உடைக்குள் மறைத்து வைத்து கொண்டாள்...
"இத எங்கேயாவது பார்த்து கட்டின அவங்களே கழட்டி எறிஞ்சிட போறாங்க இதுக்கு பேசாம பாட்டி கூடவே இருந்து இருக்கலாம்" என எண்ணி கொண்டு தயாராகி வெளியே வர அவனும் அதே நேரம் தாயராகி தன் வாட்சைதான் பார்த்துக் கொண்டிருந்தான்...
அவள் வரவும் அவன் பார்வை அவள் மீது படிந்து மீண்டது...அவளும் அவனை எதிர்கொள்ள வெள்ளை நிற சட்டை கருப்பு நிற பாண்ட் அணிந்து இருந்தான்...அவனது உடை கத்தி போல அயர்ன் செய்யபட்டு இருந்தது...அதை பார்த்தவள் எவ்வளவு நீட்டா டிரஸ் பண்றாங்க என்னை பார் என அவள் உடையை பார்த்து கொண்டாள்...என்னவோ அவள் குறைவாக இருப்பது போல இருந்தது...
அவளை பார்த்து," கீழே ஒரு ஆட்டோ நிக்கும் அதில் ஏறிக்கோ அவங்க சரியா உன்னை காலேஜ்ல கொண்டு போய் விடுவாங்க.. ஒரு வாரத்துக்கு தான் ஆட்டோல போக முடியும் அதுக்கப்புறம் பஸ்ல எப்படி போகணும்னு சொல்றேன் பஸ்ல போயிட்டு வந்துடு" என்க
பொள்ளாச்சி என்றால் அவள் தைரியமாக பஸ்ஸில் போக தலையை ஆட்டி விடுவாள் ஆனால் இந்த ஊரில் அவள் பஸ்ஸில் போக பயந்து எங்கேயாவது மாட்டி விடுவோமா என பயந்து," பஸ்லையா நானா??" என கேட்க அவனோ அவளை ஒரு மாதிரியாக பார்த்து ,"ஏன் ஒரு பிளைட் வாங்கி தரவா நீ போய்ட்டு வர??" என நக்கலாக கேட்க அவளோ அவன் கூறியதை கேட்டு ,"வேணாம்" என கூறினாள்
அவன் பர்சிலிருந்து ஒரு 500 ரூபாய் தாளை எடுத்து அவள் கையில் கொடுத்தவன் ,"மதியத்துக்கு கேண்டின்ல ஏதாவது வாங்கிக்கோ" என்றான்... அவளும் பூம்பூம் மாடு மாதிரி தலையை ஆட்ட அவனும் அவளுக்கு ஒரு வீட்டு சாவியை அவள் கையில் கொடுத்து விட்டு அவளிடம் போய்ட்டு வருகிறேன் என்று கூட கூறாமல் ஷூவை மாட்டிக்கொண்டு கிளம்ப அவளும் அவன் பின்னாலேயே வீட்டை பூட்டி கொண்டு ஓடினாள்...
அவள் அரக்கப்பறக்க ஓடிய நேரத்தில் அவனோ அவனுடைய காரை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான்... அவன் சொன்னது போல ஆட்டோ ஒன்று நின்று கொண்டிருந்தது அவளை கண்டதும்," வாங்கமா தம்பி சொன்னாரு காலேஜ்ல டிராப் பண்றேன்" என்று கூற அவளும் அந்த ஆட்டோவில் ஏறி அமர்ந்து கொண்டாள்...
பிறகு கல்லூரிக்கு அவள் வந்து விட அந்த கல்லூரியோ பறந்து விரிந்து இருந்தது... அவளுக்கு எங்க செல்ல வேண்டும் என்ன செய்ய வேண்டும் என எதுவுமே தெரியவில்லை இவ்வளவு பெரிய இடத்தை அவள் வாழ்க்கையில் பார்த்ததே இல்லை என்று கூறலாம் அவ்வளவு பெரியதாக இருந்தது இதில் அவளுடைய வகுப்பு எங்கு இருக்கிறது என தேடும் நிலைக்கு தான் அவள் தள்ளப்பட்டாள்...
அவளுக்கு தலையே சுற்றியது தேவை இல்லாமல் இங்கு வந்து விட்டோம் என்றுதான் எண்ணினாள் அவளுக்கு அவளுடைய பொள்ளாச்சி தான் பிடித்திருந்தது..
அப்படி இருக்க ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்ற நிலையில் ஓரிருவரிடம் அவளின் வகுப்பை கூறி எங்கிருக்கிறது என கேட்க அவர்களும் வழி சொல்லி கொடுத்தனர்.. அதை வைத்து தப்பித்தடுமாறி அவள் வகுப்பை சென்றடைந்தாள்...
அந்த நேரம் ஒரு ஆசிரியர் வகுப்பில் அவளோ தயங்கியபடி நிற்க ,"உன்னோட பெயர் என்ன??" என அவளைப் பார்த்து கேட்கவும் அவள் அவளுடைய பெயரை கூறி ,"நியூ அட்மிஷன்" என்று கூறவும் ,"சரி உள்ளே வா" என்று கூறினார் அந்த பேராசிரியர்...
அவளும் தயங்கித் தயங்கி உள்ளே செல்ல அந்த இடத்தில் ஆண்களும் பெண்களும் அமர்ந்து இருந்தனர்...அனைவர் பார்வையும் இவள் மீது விழுந்தது..அதை கண்டு அவளுக்கு ஒரு மாதிரியாக இருந்தது... இருந்தாலும் எங்கு சென்று அமர்வது என யோசித்து அவள் தயங்கி செல்ல ஒரு பெண் அவளுக்கு அமர இடம் கொடுத்தாள்..
அவளைப் பார்த்து சிரிக்க அவளும் சிரிக்க," என் பெயர் ரம்யா உன் பெயர் என்ன???" என கேட்க ,"கார்த்திகா" என கூற அவளுக்கு கார்த்திகாவை ரொம்ப பிடித்திருந்தது அதனால் சட்டென்று ரம்யா கார்த்திகாவிடம் ஒட்டி கொண்டாள்...
கிட்டத்தட்ட மதியம் வரை எப்படி போனது என்றே கார்த்திகாவுக்கு தெரியவில்லை... ரம்யா தோழியாக கிடைத்ததில் அவளுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது...
ரம்யாவே கேண்டினுக்கும் அழைத்து சென்று அவளுக்கு தேவையான உணவை வாங்கி கொடுத்தாள்.. அதுவும் அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது... இல்லையேல் அவள் தனியாக போய் வாங்க வேண்டி இருக்குமே என யோசித்தாள்..
எங்கு பார்த்தாலும் ஆண்களும் பெண்களும் கூடி இருக்க இது காலேஜா இல்லை வேறு ஏதாவது என கார்த்திகாவுக்கு நினைவு வந்து போனது ஏனெனில் அவள் படிக்கும் கல்லூரி மிகவும் ஸ்ட்ரிக்ட் ஆக இருந்தது இந்த கல்லூரியில் அப்படியெல்லாம் இல்லாத நிலை தான் அவளுக்கு தோன்றியது..
ஓரளவு சமாளித்துக் கொள்ளலாம் என்று அவள் நினைத்துக் கொண்டிருக்க மதியம் முடிந்து முதல் பீரியட் துவங்கியது.. அதுவரை சத்தமாக விளையாடிக் கொண்டிருந்த அவளுடைய வகுப்பு தோழர்கள் அந்த பீரியடில் மிகவும் அமைதியாக இருந்தனர் ஒருவர் கூட பேசவில்லை...
ரம்யா தான் ,"சிடுமூஞ்சி கிளாஸ்ஸா" என எண்ணி தலையில் கையை வைத்து கொள்ள கார்த்திகா," என்ன சிடுமூஞ்சியா" என கேட்டாள்..
" ஆமாம் சிடுமூஞ்சியே தான் நீ பார்த்தால் தெரிஞ்சுப்ப இவர் கிளாஸ் வந்தாலே கிளாஸ் பின்டிராப் சைலன்டா இருக்கும் ஒரே ஒரு பார்வை பார்த்தா போதும் நாம வாயை மூடிட்டு இருப்போம். பார்த்தல்ல பசங்க எப்படி இருக்காங்க அப்படின்னு அவர் எப்ப கேள்வி கேட்பார் எப்ப பாடம் எடுப்பார் எதுவும் சொல்ல முடியாது ஆனால் எல்லாரும் அவர் சப்ஜெக்ட்ல பாஸ் பண்ணிடுவாங்க அது எப்படி எல்லாம் தெரியாது மனுஷன் பார்க்க நல்லா இருப்பார் ஆனால் அவர் பேசினா போதும் அவ்வளவுதான் தேவையில்லாம ஒரு வார்த்தை பேச மாட்டார் சரியான சிடு மூஞ்சி...என்ன கேட்டாலும் முறைச்சுட்டே தான் பேசுவார்" என்று கூற
அவளும் வருவது யாரோ என ரம்யா கொடுத்த பில்டப்பை கேட்டு கொண்டு இருக்க ,"அப்படி யார் தான் வர போறாங்க ஓவர் பில்டப்பா இருக்கு" என எண்ணி கொண்டு இருக்க அந்த சமயம் பார்த்து அவளுடைய வகுப்புக்குள் நுழைந்தான் திரு வேந்தன்...
அவனை இங்கு கண்டதும் அதிர்வது இவள் முறையானது "ஐயோ இவரா வாத்தியாரா??? கடவுளே!!! என்னை இப்படி மாட்ட வைச்சுட்டியே"... என அதிர்ந்தாள்....
