வேந்தன் : 2
அத்தியாயம் : 2
"பாட்டி உங்ககிட்ட எத்தனை தடவை சொல்றது??? என்னை கல்யாணத்துக்கு போர்ஸ் பண்ணாதீங்க அப்படின்னு" என கத்தினான் திரு...அவன் முகம் கோபத்தில் கொப்பளித்தது...திருமணம் என்ற வார்த்தையே அவனுக்கு கசந்தது...
"இல்லை சாமி எவ்வளவு நாள் நீ இப்படியே இருக்க போற உனக்கு வயசு 32 ஆச்சு இன்னும் எதையும் மறக்காமல் இப்படி இருந்தா எப்படி சாமி???" என அவர் அவருடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்...
"இதுக்கு தான் நீங்க என்னை வர சொன்னீங்களா???" என கோபமாக கேட்டான் திரு..அவனுக்கு அந்த வார்த்தையை கேட்டதும் ஏற்று கொள்ள முடியவில்லை..ஏதேதோ ஞாபகங்கள் வந்து அவனை தொல்லை செய்தன... அவன் மறக்க வேண்டும் என நினைக்கின்ற காரியங்கள் யாவும் அவனை தொல்லை செய்தன... இவர்களால் எப்படி அவ்வளவு எளிதாக இல்லாத ஆட்களை நினைக்காமல் இருக்க முடியாமல் போகிறது என அவன் மனம் குமைந்தது...
இது எல்லாம் கார்த்திகாவின் காதுக்கு கேட்டு கொண்டிருந்தாலும் அவளோ அந்த இடத்தை விட்டு பத்து அடி தொலைவில் இருக்கும் அறையே கதி என இருந்து கொண்டாள்...
அவளுக்கு அவனின் தவிப்பு புரிந்தது...அவன் என்ன சொல்ல வருகிறான் என அவளுடைய அறிவுக்கு எட்டினாலும் இது எல்லாம் பெரியவர்களின் பேச்சு ஆனால் திரு அண்ணா பாவம் என மனதுக்குள் எண்ணி கொண்டாள்...
அவரும் ஒரே முடிவில் இருப்பார் போல அதனால்,"ஆமாம் இதுக்கு தான் வர சொன்னேன் நாளைக்கு நாம பொண்ணு பார்க்க போறோம் பொண்ணு இந்த ஊரு தான்" என அவர் கூற அவனுக்கு எங்கிருந்து தான் ஆத்திரம் வந்ததோ அவன் முன்னால் இருந்த கண்ணாடி மேசையை ஓங்கி குத்தினான்..அவனது ஆத்திரத்தை கட்டுப்படுத்த அவனுக்கு வழி தெரியவில்லை...அதனால் அவன் அப்படி செய்தான்...
அதை கண்ட பொன்னுசாமி ,"என்னய்யா இப்படி பண்ற???" என பதறி துடிக்க அவளோ சத்தம் கேட்டு வெளியே வந்தவள் அங்கு மேசை இரண்டு துண்டாக இருப்பதை பார்த்து அதிர்ந்தாள்... அவனின் இறுகிய முகத்தை பார்க்கவே கார்த்திகாவுக்கு பயமாக இருந்தது...
பெரியவர்கள் வருத்தபடுவதை பார்த்த அவள் என்ன பேசுவது என தடுமாறி நின்றாள்.. ஏனெனில் இது எப்போதும் நடக்கும் கதைதான்...
"பாருங்க தாத்தா எப்ப பாரு கல்யாணம் கல்யாணம் அப்படின்னு சொல்லிட்டு இருக்காங்க அதனாலயே இங்கே வர விருப்பமில்லாமல் நான் இருக்கேன் ஏன் கல்யாணம் பண்ணிக்காம வாழவே முடியாதா கல்யாணம் ஒன்னு தான் மனுஷனோட வாழ்வாதாரமா??? என் வாழ்க்கையில என்ன நடந்ததுன்னு உங்க எல்லாருக்கும் தெரியும் தெரிஞ்சும் நீங்க மறுபடியும் மறுபடியும் என்னை ஏன் இப்படி கட்டாய படுத்துறீங்க" என கோபத்தோடு கேட்டான்..
அதை கண்ட அவனுடைய பாட்டி சட்டென்று அழுதவர்," போனவ மகராசி போய் சேர்ந்துட்டா ஆனால் தினம் தினம் நீ சங்கடப்பட்டு, துயரபட்டு அவளை நினைச்சு ஏங்கி இருக்கிறத பார்க்க முடியல தம்பி...
எங்களை என்னதான் பண்ண சொல்ற??? எங்களுக்கு இருக்கிறது நான் நீ மட்டும் தான்.. உன்னோட அம்மாவும் அப்பாவும் போய் சேர்ந்துட்டாங்க நீயும் எங்களை படுத்தி எடுக்கிற கொஞ்சமாவது எங்களை யாராவது யோசிச்சு பாக்குறீங்களா??? உன்னை அம்போன்னு விட்டுட்டு எங்களால போக முடியுமா உசுர கையில பிடிச்சுட்டு இருக்கோம்.. உனக்கு ஏதாவது பண்ணிட்டு தான் அடுத்த வருஷம் அவ படிப்பு முடிஞ்சதும் அவளை எவன் கையிலாவது புடிச்சு கொடுக்கணும்" என கார்த்திகாவை காட்டி கூறி அவர் ஒரு மூலையில் உட்கார்ந்து அழ ஆரம்பிக்க கார்த்திகாவுக்கு திக் என்று ஆனது... என்ன என்னோட கல்யாணமா என அவள் அதிர்ந்தாள்...
அவனும் தன் ஆத்திரத்தை அடக்க முடியாமல் கார்த்திகாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு உடனே அந்த இடத்தை விட்டு எழுந்து சென்றவன் உடைமாற்றிக் கொண்டு அடுத்த நொடியே கீழே இறங்கி வந்தவன் காரை எடுத்துக் கொண்டு கிளம்பும் நேரம் அங்கே ஒரு பொருள் அவனுடைய கண்ணில் பட்டு மேலும் அவனுடைய ஆத்திரத்தை அதிகப்படுத்தியது...
அதை கண்டு கொள்ளாமல் காரை எடுத்தவன் அப்படியே அரை மணி நேரத்தில் ஒரு வீட்டுக்கு முன்னால் போய் தன் வாகனத்தை நிறுத்தினான்....
அந்த இடமும் அவனை அழுத்தியது... பல பல நியாபகங்கள் வந்து அவனை தொல்லை செய்தன...இருந்தாலும் வீட்டுக்குள் செல்லாமல் போனை எடுத்து யாருக்கோ அழைத்தான்...
அவன் அழைத்த இரண்டாவது நிமிடம் அந்த வீட்டின் கதவை திறந்து ஒருவர் வந்தார் அவர் ராமகிருஷ்ணன்... அவன் வீட்டுக்குள் வரமாட்டான் என அவருக்கு நன்றாக தெரியும் அதனாலேயே அவர் வீட்டுக்கு வெளியே வந்து நின்றார்...
அவரைக் கண்டதும் காரில் இருந்து இறங்கிய அவன் தன் கோபத்தை மறைக்க அரும்பாடு பட்டான்... அதைப் பார்த்துக் கொண்டு வந்த ராமகிருஷ்ணன்," என்ன திரு எப்ப வந்த???" என அமைதியாக கேட்டார்..." இன்னைக்கு மத்தியானம் வந்தேன் சார்" என்று கூற ,"அப்படியா காலேஜ் எல்லாம் நல்லா போகுதா தாத்தா, பாட்டி எல்லாம் நல்லா இருக்காங்களா???" என அக்கறையாக விசாரித்தார்...
அவருடைய முகத்தைப் பார்த்து அவனால் பேச முடியவில்லை ஏதோ தொண்டை அடைத்தது.. அவருக்கு ஏதோ துரோகம் செய்தது போல அவனுக்கு தோன்றியது.. ராமகிருஷ்ணனின் முகம் தொய்வாக இருப்பது போல அவனுக்கு தோன்றியது இதற்கெல்லாம் காரணம் நான் தானே என அவன் எண்ணினான்...
ஆனால் அவர் அதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை எதார்த்தமாக அவனிடம் உரையாடினார்.. அவரின் அந்த யதார்த்தம் தான் அவனை துண்டு துண்டாக்கியது என்று கூற வேண்டும்... இந்த மனிதரால் எப்படி முடிகிறது என்னோடு இயல்பாக பழக எப்படி முடிகிறது என அவனுக்கு விளங்கவில்லை...
அவர் வேறு யாரும் அல்ல இவனை படிப்பித்த இவனுடைய குரு..ஆசான்...என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் புரோபசர் ராமகிருஷ்ணன்...தன் குருவின் மகளான மாயாவை நேசித்தான் உயிருக்கு உயிராக நேசித்தான்.. கிட்டத்தட்ட 10ஆண்டுகளாக காதலித்தான்...காதலித்து கொண்டும் இருக்கிறான்...அவளும் அவனை உயிருக்கு உயிராக நேசித்தாள்... அவள் அவனை விட்டு போய்விட்டாள்.. அந்தக் கடவுளுக்கு அவன் நேசிக்கும் ஆட்கள் எல்லாம் ரொம்ப பிடிக்கும் போல வெகு சீக்கிரமாகவே அவளையும் கொண்டு சென்று விட்டான்...
அதன் பிறகு அவனுடைய வாழ்க்கை முறை மாற நியாயமாக ராமகிருஷ்ணன் இவனிடம் கோபம் கொண்டு இருக்க வேண்டும்...பேசி இருக்க கூடாது அவளின் மரணத்திற்கு இவனின் சிறு அஜாக்கிரதை கூட காரணம் என்று கூறலாம்....ஆனால் அவரோ எதார்த்தமாக அவனோடு நட்பு பாராட்டுவதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை... இருந்தாலும் அவரிடமே அவன் சரணடைந்தான்...
அவரை விட்டால் அவனுக்கு வேறு யாரும் இல்லை என்ற நிலையில் ,"சார் என்னால மாயாவை மறக்க முடியல மாயா இல்லாத வாழ்க்கை என்னால் யோசித்துக் கூட பார்க்க முடியல இந்த அஞ்சு வருஷம் நான் எப்படி கடந்தேன் எனக்கு தெரியல அவளுக்கு பிடித்ததெல்லாம் செய்யறேன்... அவள் இருந்த இடத்துல எல்லாம் அவளை தேடுறேன் அவளுக்காக அவள் செஞ்சிட்டிருந்த ப்ரொபசர் ஒர்க்கை நான் எடுத்து செய்கிறேன் இருந்தாலும் அவளை எங்கே தேடியும் அவளை எனக்கு கிடைக்கல...அவன் ஞாபகம் என் கண்ணுக்குள்ள இருக்கு...
அவளுடைய நினைவுகள் என் நெஞ்சை விட்டுப் போகல ஆனால் என்னோட மனசு யாருமே புரிஞ்சுக்கல எனக்கு வீட்ல மறுபடியும் கல்யாணம் பேசுறாங்க எனக்கு இதுல சுத்தமா விருப்பம் இல்லை.. ஏன் எல்லாரும் மாயாவை மறக்கறாங்க அவ்வளவு சீக்கிரம் அவங்களால எப்படி அவளை மறக்க முடியுது?? " என்று அவன் கூற
அதைக் கேட்ட ராமகிருஷ்ணன் தன் கண்ணாடியை சரி செய்து கொண்டே ,"போனவளை நினைச்சுட்டு எல்லாரையும் உட்காந்துட்டு இருக்க சொல்றியா???அப்போ மாயாவை நெனச்சிட்டு உயிரை விடலாம் நினைச்சுட்டு இருக்கியா???" என கேட்டார்...
அதைக் கேட்ட அவனுக்கு பதில் இல்லை ,"என்ன பதில் பேச மாட்டேங்கற அப்படி சாகணும்னு ஆசை இருந்தா ஒரு பொண்ண இப்படி பறி கொடுத்த நாங்க தான் சாகணும்.. அவளை இழந்த நாங்க தான் சாகனும் ஒரே பொண்ணு எங்களோட நம்பிக்கையே அவள் தான் அவள் இல்லாத வாழ்க்கையை தான் நாங்க வாழ்ந்துட்டு இருக்கோம்.. நாங்க இன்னும் உயிரோட தானே இருக்கோம்... உன் வழியா நான் என் பொண்ணை பாத்துட்டு இருக்கேன்.. நீ அவளை கண்மூடித்தனமா நேசிக்கிற அந்த நேசிப்பில் நான் அவளைப் பார்க்கிறேன் நீ ஒவ்வொரு தடவையும் இங்கே வரும்போது உன் ரூபத்துல அவள் எங்களை வந்து பார்க்கிறா அப்படித்தான் நாங்க நினைக்கிறோம்...
விபத்தில் அவள் இறந்துட்டா அதுக்கு நீயும், நானும் யாரும் காரணம் கிடையாது.. அப்படி இருக்கும்போது அதையே நினைச்சுட்டு உன்னுடைய வாழ்க்கையை பாழாக்குகிறதில் எந்த அர்த்தமும் கிடையாது..
நான் உன்னுடைய தாத்தா கிட்ட பேசினேன் நான் தான் உனக்கு பொண்ணு பார்க்க சொன்னேன்... அவரும் பாத்துட்டாரு நீ நாளைக்கு அந்த பொண்ணை பார்க்க போ நினைச்ச வாழ்க்கை தான் கிடைக்கணும்னு நினைச்சா எந்த உலகத்துல யாரும் வாழ முடியாது கிடைக்கிற வாழ்க்கையை கொஞ்சம் ரசித்து பார்,.நல்லா இருக்கும்... பலர் நம்ம வாழ்க்கையில வந்து போவாங்க அவங்க எல்லாருமே நம்ம கூட வருவாங்களான்னு கேட்டா கிடையாது இந்த உடம்புல உயிர் கூட ஒரு நாள் நம்ம கூட வராது அப்படிங்கும் போது மனுஷங்களை நம்பி நம்ம வாழ்க்கையை தொலைக்கிறது முட்டாள்தனம்.. அவங்களுக்கும் வயசாகிட்டு இருக்கு அவங்களையும் புரிஞ்சுக்கோ உனக்கு பிடிச்சிருக்கு பிடிக்கலையோ அவங்களுக்காகவாவது உன்னோட வாழ்க்கையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துட்டு போ இப்படியே தேங்கி நின்னுடாத இது எங்களையெல்லாம் கொல்லுது...
நான் படிச்சிருக்கேன் அதனால உனக்கு விளக்கமா சொல்ல முடியுது அவங்க படிக்காதவங்க அவங்களால இதை எப்படி சொல்லணும் தெரியாம அவங்களோட ஆதங்கத்தை தான் கொட்டுவாங்க தயவு செஞ்சு அவங்க மனசை புரிந்து கொள்" என்று அவர் கூறினார்...
அவர் கூறியதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றாலும் அவருக்காகவும் அவனுடைய தாத்தா பாட்டிக்காகவும் திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டான் திரு...
அதன் பிறகு எதிலும் நாட்டமே இல்லாமல் தான் இருந்தான்... ஆனால் ராமகிருஷ்ணன் மற்றும் பொன்னுசாமி இருவரும் கலந்தாலோசித்து அவர்கள் ஏற்கனவே பார்த்து வைத்திருந்த பெண்ணை காண திருவை அழைத்து சென்றனர்..
அவள் காவ்யா அவளும் பேராசிரியராக கார்த்திகா படிக்கும் கல்லூரியில் தான் வேலை செய்கிறாள்...பெண் பார்க்க கார்த்திகாவும் திருவோடு வந்து இருக்க அவனோ அந்த பெண்ணை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை...
அனைவரும் பேசி கொண்டு இருக்க அவளோ அவளின் ஆசிரியரை பார்த்து சிரித்தாள்... காவ்யாவும் பதிலுக்கு சிரிக்க," பொண்ணுகிட்ட ஏதாவது பேசனுமா??? " என பெண் வீட்டார் கேட்க
அனைவரும் திருவை பார்த்தனர்...அவன் இதுவரை வந்ததே பெரிது என எண்ணியவர் அவனை பார்க்க ,"இவங்களுக்கு எல்லாம் ஓகேன்னா எனக்கு ஓகே தான் உங்க பொண்ணுகிட்ட கேட்டுக்கோங்க என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதமா அப்படின்னு கேட்டுக்கோங்க" என கூறி விட்டு அந்த இடத்தை விட்டு எழுந்து சென்றான்... அவனின் பாரா முகம் பெரியவர்களுக்கு வருத்தத்தை கொடுத்தாலும் பின்னாளில் அவன் மாறி விடுவான் என்ற நம்பிக்கையில் இருந்தனர்...
அவனுக்கு எதுவுமே பிடிக்கவில்லை...அவன் சட்டென்று வெளியேறியதும் அனைவருக்கும் அவனுடைய கோபம் புரிந்தாலும் யாரும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை..
ஏனெனில் அனைவருக்கும் இவனுக்கு ஒரு திருமணம் ஆனால் போதுமென்று தான் இருந்தது...அப்படி இருக்க பொன்னுசாமி மற்றும் ராமகிருஷ்ணன் இருவரும் சேர்ந்து மேற்கொண்டு எல்லாம் பேசி முடித்து விட்டனர்...
கார்த்திகாவுக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது...எப்படியோ திரு தனக்கான வாழ்க்கையை தீர்மானித்து கொள்கிறான் என எண்ணி கொண்டாள்...
ஆனால் அவள் மூலமாகவே அந்த திருமணம் தடைபடுகிறது என்றால் என்ன ஆகும் திருவின் நிலைமை??? அவனே பிறருக்காக தனக்கு விருப்பமே இல்லாத வாழ்கையில் இணைத்து கொள்ள இருக்க அதுவும் தடைபடும் எனில் அவன் நிலைமை என்ன ஆகும்??? அவன் எப்படி இதை எதிர் கொள்வான்????
